Friday, January 20, 2017

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

னிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். 

செல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் இருக்கும் நமக்கு அவற்றைப் பராமரிப்பது எப்படி, கடித்துவிட்டால், நகத்தால் பிராண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.

செல்லப்பிராணிகள் கடித்தவுடன் செய்யவேண்டியவை...

வீட்டில் வளர்க்கும் நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், முதலில், குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது 5 - 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது நல்லது. 

காயத்தின் மீது சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

எந்த ஒரு விலங்கு கடித்தாலும் முதலில், டி.டி (Tetanus vaccine) தடுப்பூசி போட வேண்டும். நாய்க்கடியாக இருந்தால், பிறகு, ஆன்டி-ரேபிஸ் ஊசியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு ஒரு மி.லி. இது, புஜத்தில் போடப்படும். முதல் நாளே ஊசி போடப்படும். அதில் இருந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரைத்தால், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.

எலி கடித்தால், எலியின் கழிவுகளை மிதித்தால் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும்  எலிக் காய்ச்சல் வரும். இதைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். 

செய்யக்கூடாதவை!

விலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

கடித்தால் மட்டும்தான் பிரச்னையா?

செல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.

மருத்துவரின் அறிவுரைப்படி, பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட, கால இடைவெளியில் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். உண்ணிகள், பேன்கள் போன்றவை வராமல் இருக்க மருந்துகள் போட்டு, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், நோய்களில் இருந்து நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் காக்கலாம்.



கவனிக்க...

* எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும், விளையாடினாலும் உடனடியாக கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். 

* அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.

* எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.

* விலங்குகளுக்கு இறைச்சியைச் சமைக்காமல் கொடுக்கக் கூடாது. செல்லப் பிராணிகளின் கூண்டு, தங்கும் இடம் ஆகியவை விசாலமாக இருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.