Friday, July 8, 2011

தாம்பத்தியம் - 4

வெளியில் தெரியாத ஆண்மை:

பலரின் எண்ணத்தில் ஆண்கள் என்றாலே முரடர்கள், ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்டு பெண்மையை மதிக்காதவர்கள் , பெண்களை சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்பவர்கள், சிறு கோபம் என்றாலும் பெண்மையை இழிவு படுத்த தயங்காதவர்கள் , குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் , கெட்ட பழக்கம் அனைத்தும் கொண்டவர்கள் என்று பல விதமான தவறான கண்ணோட்டத்தில் நினைத்தே, பார்த்தே  நமக்கு பழகிவிட்டது. உண்மையில் இது அவ்வளவு சரி அல்ல என்பதுதான் பொதுவான என் கருத்து.  ஆண், பெண் அனைவருமே குறைகளுக்கு குறைந்தவர்கள் இல்லை

பெண்ணே காரணம்:

இன்றைய கால கட்டத்தில் ஆண்களின் பல தவறுகளுக்கும் ஒரு விதத்தில் பெண்களே காரணமாக இருந்துவிடுகிறார்கள்.  ஆனால் எந்த ஆணும் இதை வெளியே  சொல்வது இல்லை அதனால் தான் பல பெண்களும் வெளி பார்வைக்கு  இன்னமும் நல்லவர்களாகவே இருந்துவருகிறார்கள். பெண்மையை மதிக்க தெரியாத எந்த ஆணும் தவறானவன்தான்  அதே போல் ஆண்மையை மதிக்க தெரியாத பெண்மையும் வீண்தான்!!   

பெண்களை விட :ஆண்களிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டு கொடுத்து போவது போன்ற குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் பெண்களை போல் மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் கொட்ட தெரியாதவர்கள். அன்பையும் அழுத்தமாக சொல்லதெரியாதவர்கள்.  அதனாலேயே மனைவியிடம் அதிக அன்பு இருந்தும் வெளிபடுத்தாமல் போய்விடுவதால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன.

எல்லாம் புரிந்து இருந்தும் சிறுவயதில் இருந்து 'ஆண் பிள்ளை அழகூடாது' என்று பெரிதாக சொல்லியே வளர்க்க பட்டு வருவதால் அவர்களும் அன்பு, அழுகை போன்ற உணர்சிகளையும் மனதிற்குள்ளையே போட்டு அழுத்தி விடுகின்றனர்.  இந்த உணர்சிகள் ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை.  வெளிபடுத்த  வேண்டிய  நேரத்தில்  வெளிபடுத்தாவிட்டால் மனதையும் சேர்த்து உடம்பிற்கும் அது கேடு பயக்கும்.


ஆண்களுக்கும்  உண்டு தாய்மை:


பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள்தான் தாய்மை என்ற மகாசக்தியை பெற்று இருப்பதால்  ! ஆனால் சாதாரண ஒரு பெண்ணையும் மகாசக்தியாக, தாயாக மாற்றுவது அந்த ஆண்மைதான் !!  ஒரு பெண் வயிற்றில் குழந்தையை சுமக்கும் அதே நேரம் அவளது கணவன் அந்த சுமையை தன் மனதில் சுமக்கிறான்.

மனைவி குழந்தை உண்டானதும் எல்லோரைவிடவும் சந்தோசத்தின் உச்சத்தை அடைவது அந்த கணவன்தான்......!  தனது ஆண்மை நிரூப்பிகபட்டதாக எண்ணி நெஞ்சை நிமிர்த்தி குதூகலம் அடைகிறான்......!  தன்னை கணவன் என்ற நிலையில் இருந்து தகப்பன் என்ற நிலையை அடைய கூடிய சந்தர்பத்தை கொடுத்த மனைவியை எண்ணி பெருமித படுகிறான்......!  அவனால் முடிந்தவரை அவளை சந்தோசமாக வைத்து கொள்ள முயலுவான்......!


பிடித்த பொருட்கள், பழங்கள், பூக்களை வாங்கி கொடுத்து அவளது மன தேவைகளை நிறைவேற்றி வைப்பதின் மூலம் அந்த மனைவிக்கு  அந்த கணவன் தந்தையாகிறான் !!

நிறைமாத வலியுடன் தவிக்கும் போது ஆதரவாக தன் தோளில் சாய்த்து ' நான் இருக்கிறேன் ' என்று சொல்லும்போதும், இதமாக கை, கால்களை பிடித்து விட்டு, சில நேரம் உணவு ஊட்டிவிடும்போதும் அந்த மனைவிக்குஅக்கணவன் ஒரு தாயுமானவன் !!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியுடன் இருந்து கண்ணின் மணிபோல் காத்து கொள்ளும் அவனில் தனது தாயையும், தகப்பனையும் ஒருசேர பார்க்கும் மனைவிக்கு தன் பிறந்த வீடு சில நேரம் மறந்துதான் போகிறது........!!

திருமண ஆன பெண்களை அவளது தாயே சில நேரம் வீட்டுக்காரனை பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்ல விட மாட்டியே? விட்டு குடுக்காம பேசறியே? நேத்து வந்த அவன் பெரிசா போயிட்டானா ? அப்படின்னு சலிப்பா குறை சொல்வதை கேட்டிருக்கலாம். (அந்த பெண்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்!!)


சிலர் வேண்டுமானால் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையால் மாறுபடலாமே ஒழிய மனைவியை மனதில் சுமப்பவர்கள்தான் அதிகம்.

பிரசவ  நேரத்திலும் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவன் மனவலியால் துடித்து கொண்டிருப்பான்.  ஆண் என்பதால் வெளியில் தெரியாமல் கண்ணீர் விட்டவர் பலர்......!! தன் மனைவி படும் வேதனையை காணும்போதுதான் தன்னை பெற தன் தாய் எவ்வாறு கஷ்டபட்டிருப்பாள் என்பதை உணர்ந்து மானசீகமாக தன் தாயை வணங்குகிறான்.  மனைவிக்காக அதுவரை வணங்காத தெய்வங்களை எல்லாம் மனதிற்குள் பூஜிக்க தொடங்கிவிடுவான். (அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் சில வேண்டுதல்களைகூட கடவுளிடம் வைத்து விடுவான்)

ஆப்பரேசன் அறைக்குள் போவதற்கு முன் தன் மனைவியின் கரம் பற்றி, 'ஒன்றும் ஆகாது போய்வா ' என்று தைரியம் சொல்லி அனுப்பி விட்டு தனக்குள் சிறுபிள்ளையாய் கலங்குகிறான்....! அவள் உள்ளே கதறும் சத்தம் கேட்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.......! பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததும் எந்த கணவனும் முதலில் தன் குழந்தையை பார்க்க ஓடுவது இல்லை!  தன் மனைவி எப்படி இருக்கிறாள் என்றுதான்  பரபரப்புடன் மனைவியிடம் ஓடுவான்.பிறகு அருகில் சென்று களை  இழந்து இருக்கிற தன் மனைவியின் முகத்தை பார்த்து அவள் கரம் பற்றி மென்மையாக வருடி ,   ' ரொம்ப கஷ்டபட்டியாமா '  என்று ஆதரவாக கேட்கும்போது அந்த மனைவியின் வலி, வேதனை அனைத்தும் அந்தநொடியே மறைந்து போய்விடுமே!  அவளும் பெருமிதத்துடன் ,    "பரவாயில்லைங்க, நம்ம குழந்தையை பாருங்க"  என்று குழந்தையை நோக்கி கைகாட்டுகிறாள்.  இருவரும் சேர்ந்து ஒன்றாக குழந்தையை பார்க்கும் இந்த அற்புத காட்சியை பலர் அனுபவித்திருப்பார்கள்.  அன்பும், பாசமும், தாய்மையும் பிரவாகம் எடுத்து ஓடும் இந்த இடத்தில் பெரிய  காவியங்கள் கூட தோற்றுவிடுமே......!!!

தன்னையே உரித்து  வைத்திருக்கும் குழந்தையை கொடுத்த உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று மனைவியை எண்ணி பெரும் உவகை அடைகின்ற  அந்த கணவனால் எப்படி  பின்னாளில் தன் மனைவியை வெறுத்து சண்டை போட இயலும் ? யோசிக்கவேண்டிய தருணம் ??

தாய்க்கு பின் தாரம்:இந்த வார்த்தைக்கு பலரும் பல அர்த்தம் கொடுக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஆணும் தன் மனைவி இடத்து தனது தாயை தேடுகிறான் என்பதே...!தன் தாயால் தனக்கு கிடைத்த அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் தனது மனைவியிடமும் எதிர்பார்க்கிறான்...!! இந்த அன்பும், பாசமும் மறுதலிக்க படும்போதுதான் ஏமாற்றம் ஏற்படுகிறது , ஏமாற்றம் கருத்து வேறுபாட்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறது .

   " பெண்கள் யாரை மனதார காதலிக்கிறார்களோ,  அந்த ஆண்கள்,
           அந்த பெண்கள் எதிரில் பச்சை குழந்தைகளாகி விடுவர்! " -தாகூர்.

இந்த வார்த்தைகள் கணவன், மனைவிக்கும் பொருந்தும்.  பழைய காலத்தில் இருந்து இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்  , தலையணை மந்திரம் போட்டுவிட்டாள் என்று...?!  அது வேறு எந்த தவறான அர்த்தத்திலும் சொல்லப்படவில்லை என்பதுதான் என் புரிந்துகொள்ளுதல் !!   அன்பால் தன் கணவனை கட்டிபோட்டு வைத்து இருக்கிறாள் என்பதே அதன் உள்அர்த்தம்!!

இப்படி அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் தான் இந்த அப்பாவி ஆண்கள்! இந்த அன்புதான் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது ! தைரியத்தை கொடுக்கிறது! கவலையில் துவண்டாலும் ஆறுதலை கொடுக்கிறது !  முரடான மனதையும் மென்மையாக மாற்றுகிறது !  கோபம் என்ற தணலையும் அணைக்ககூடிய நீராக இருக்கிறது ! மனைவி செலுத்தும் அந்த அன்பிற்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கவும் தயங்கமாட்டான் !!!


பின் குறிப்பு :


ஆண்களின் நிறைகள் என்று பார்த்தால் இன்னும் சொல்லலாம், ஆனால் " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் "      என்பதால் இது போதும் !!