Monday, May 27, 2013

மண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி!

திருச்சி லால்குடிக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம். இங்கே சுமார் 900 வருடங்கள் பழைமைமிக்க ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, பிற்காலத்தில் பாண்டியர்களும் திருப்பணிகள் பல செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள்.

ஸ்வாமி மற்றும் அம்பாளின் திருப்பெயர்களே, இது கல்யாண வரம் தரும் ஆலயம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மாங்கல்ய மகரிஷி என்பவர், உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இந்தத் தலத்துக்கு வந்து சிவ- பார்வதியை வணங்கித் தொழுது அருள்பெற்றிருக்கிறார். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தித் தந்தவர் மாங்கல்ய மகரிஷி. எனவே, அவர் வணங்கி வழிபட்ட இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் ஒரே சந்நிதியில் இங்கே காட்சி தருகின்றனர்.

உத்திர நட்சத்திரக்காரரான மாங்கல்ய மகரிஷி வழிபட்டுப் பலன் பெற்ற தலம் என்பதால், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில், மாங்கல்யத்துடனும் மாலைகளுடனும் பறப்பது போன்ற தேவதைகளைப் பார்த்திருக்கிறீர்கள்தானே... அந்தத் தேவதைகளுக்கு இவரே குரு! திருமண வைபவ நேரத்தை, சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பார்கள். அற்புதமான அந்த நேரத்தில், தன் சீடர்களான தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருள்கிறார் மகரிஷி என்பதாக ஐதீகம்! இங்கே... தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் மாங்கல்ய மகரிஷி.


உத்திர நட்சத்திரம் என்பது, மாங்கல்ய வரம் தருகிற சக்தி நிறைந்திருக்கும் தன்மை கொண்டது. அதனாலேயே பங்குனி உத்திர நன்னாளில், தெய்வங்களுக்குத் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன.

உத்திர நட்சத்திர அன்பர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும் இன்னல்கள் அகலவும் உத்திர நட்சத்திர நாளில் இங்கு வந்து ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரரையும் மகரிஷியையும் மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் தோஷம் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.

தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய்விளக்கு ஏற்றி, மாலை சார்த்தி, அவரின் திருப்பாதத்தில் ஜாதகம் வைத்து வழிபடவேண்டும். அதேபோல், ஸ்ரீமங்கலாம்பிகைக்கும் ஸ்ரீமாங்கல்யேஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண வரன் தேடி வரும். பிறகு மூன்று மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

அத்துடன், வரன் தகைந்ததும் கல்யாணப் பத்திரிகையுடன் வந்து ஸ்வாமி, அம்பாள் மற்றும் மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்குப் பத்திரிகை வைத்து, கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு மட்டுமின்றி, அவர்களையும் கல்யாணத்துக்கு வரும்படி பக்தர்கள் அழைப்பு விடுப்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்! கல்யாண வரம் மட்டுமின்றி குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் இங்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம்.