Tuesday, July 12, 2011

தவறாகப் பேசினால் தண்டனையில் பங்குண்டு!

தவறாகப் பேசினால் தண்டனையில் பங்குண்டு!

ஒரு அரசனும் அவனது செல்வ புத்திரியும் நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தனர்.அரசன் சிவ பக்தன். ஆனால், ஆணவம் கொண்டவன். அந்நாட்டை ஒட்டிய காட்டில் மாதவர் என்ற முனி வர் தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தின் ஊடே என்றாவது ஒருநாள் கண்ணைத் திறக்காமலே கையை நீட் டுவார். அதில் யாராவது எதையாவது போட்டால் என்னவென்றே பார்க்காமல்  சாப்பிட்டு விட்டார். ஆணவம் பிடித்த அரசன் ஒருநாள் அவ்வழியே சென்றான். அந்நேரம் பார்த்தா முனிவர் கை நீட்ட வேண்டும்? முனிவரின் கையில் தான் வந்த குதிரையின் சாணத்தில் ஒரு உருண்டை எடுத்து போட் டான் மன்னன். முனிவர் வழக்கம் போல் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார். ஒருநாள் நாரதர் மன்னனின் அவைக்கு வந்தார். நாரதரே சவுக்கியமா? சத்தியலோகத்தில் உம் அன்னை, தந்தை எல்லாரும் எப்படி உள்ளனர்? நாராயண மூர்த்தி எப்படி இருக்கிறார்? சிவலோகம் போனீரா? என்றெல்லாம் குசலம் விசாரித்தான் மன்னன். உம்... எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், நரகலோகத்தில் தான் ஒரு குழப்பம். எல்லாரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள் என்றார் நாரதர். வேடிக்கையாக இருக்கிறதே, நரகலோகமே நாற்றமெடுக்கும் வகையில் அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறார்கள்? என்றான் மன்னன்.

நாரதர் அவனிடம்,அடேய்! எல்லாம் உன்னால் வந்த வினைதானடா! நீ மாதவ முனிவர் கையில் போட்டாயே ஒரு உருண்டை குதிரைச் சாணம். அது மலை போல வளர்ந்து குவிந்து கிடக்கிறது. நீ செத்ததும் அங்கு தான் போகப் போகிறாய். உன் கையாலேயே அவ்வளவையும் அள்ளி சாப்பிட வைக்கப் போகிறார்கள் எம கிங்கரர்கள், என்றார்; அவ்வளவு தான். மன்னன் ஆடிப்போய் விட்டான். நாரதர் மறைந்து விட்டார். தன் மகளிடம் நடந்ததைச் சொல்லி அழுதான். தந்தையே கவலைப்படாதீர்கள். தாங்கள் செய்தது மகாதவறு தான். அதற்காக மனம் வருந்துங்கள். உங்கள் மகளான நான், இந்த இக்கட்டிலிருந்து உங்களைப் பாதுகாப்பேன். உங்கள் அந்தப்புரத்தில் தான் நான் இன்றுமுதல் தங்குவேன், என்றாள். மன்னனுக்கு மகள் சொல்வதன் காரணம் புரியவில்லை. எப்படியோ இத்தண்டனையிலிருந்து மீண்டால் சரிதான் என ஒப்புக்கொண்டான். மன்னனும், மகளும் அந்தப்புரத்தில் தங்கியதை ஊர் உலகம் தவறாகப் பேசியது. இந்த அரசனும், இந்த இளவரசியும் காமப்பிசாசுகள். எந்த நாட்டிலாவது இப்படி ஒரு அநியாயம் உண்டா? தந்தையே மகளை வைத்திருக்கும் இந்நாட்டில் மழை பெய்யுமா? என வாய் கூசாமல் பேசினர். ஒருநாள்  ஒரு கண்ணில்லாத வாலிபனும், அவன் மனைவியும் அரண்மனை முன் வந்தனர்.

மனைவியிடம் கணவன், நாம் இப்போது எந்த   இடத்தில் நிற்கிறோம்? என்றான். அரண்மனை முன்னால், என்ற மனைவியிடம், அடியே! நம் ராசா தன் மகளையே வைத்துக் கொண்டிருக்கிறாரே, அந்த அரண்மனை முன்பா? என்றான் கேலியாக. அவன் மனைவி பதில் சொன்னாள். நரகத்தில் நம் மன்னர் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்க மலை போல குதிரைச் சாணத்தை குவித்து வைத்திருந்தார்கள். ராஜாவைப் பற்றி இவ்வூர் மக்களில் யாரெல்லாம் தவறாகப் பேசினார்களோ, அவர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு உருண்டையாக பிரித்து விட்டனர் எமகிங்கரர்கள். இப்போது ஒரு உருண்டை மட்டும் தான் பாக்கியிருக்கிறது. அதை உமக்காக ஒதுக்கி விட்டார்கள், என்றாள். கண்ணில்லாதவன் திடுக்கிட்டான். மன்னர் காதில் இவர்களது சம்பாஷணை விழுந்தது. தன் மீதிருந்த பாவம் விலகியதைத் தெரிந்து கொண்டான். அந்த தம்பதிகளுக்கு பாதபூஜை செய்தான். அன்றுமுதல் அவன் பாவச்செயல்களைப் பார்த்தால்  கண்ணை மூடிக் கொண்டான்.