Saturday, October 5, 2013

திருமண வரவேற்பு விழாவில், மரக்கன்று வினியோகம்!

திருமண வரவேற்பு விழாவில், மரக்கன்று வினியோகம்!

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என, நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை துறை உட்பட, அனைத்து அரசு அலுவலக சுவர்களில், அரசு சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த வாசகங்களை படித்து, எத்தனை பேர் மரம் வளர்க்கின்றனர் என்பது, இதுவரை தெரியவில்லை.

என் நண்பர், இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. கிராமம் மற்றும் நகர்ப்புறத்திலிருந்து உறவினர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்திற்கு வந்தோருக்கு, புளியமரம், வேப்ப மரக் கன்றுகள் உட்பட, 13 வகையான மரக்கன்றுகளை பையில் போட்டு, தாம்பூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, என் நண்பர் கூறும் போது, "தேங்காய் கொடுக்கும் செலவே, மரக்கன்றுகள் கொடுப்பதற்கும் ஆகிறது. இப்படியாவது, மரம் வளர்ந்து மழை பெறுவதற்கு, என்னால் முடிந்த காரியத்தை செய்து உள்ளேன் சிலருக்கு, மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும் என்று தெரிவது இல்லை. இங்கு இலவசமாக மரக்கன்றுகள் கொடுப்பதால், அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்...' என்றார்.

இனிவரும் காலங்களில், இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய், பழத்திற்கு பதிலாக, ஆளுக்கொரு மரக்கன்று கொடுத்தால், மரம் வளர்ப்பதும், மழை பெறுவதும் எளிதாக இருக்கும்.

இந்த ஐடியாவை எல்லாரும் கடைப்பிடிப்பரா?