Tuesday, October 29, 2013

தீபாவளி திருக்கதை - குபேர யோகம்!

குபேர யோகம்!
விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.
அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். ''தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.
இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.