Monday, June 22, 2015

மணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்!

''இன்றைய இளம் தலைமுறையினருக்கு திருமணத்துக்கு முன்னதாக 'மேரேஜ் கவுன்சலிங்' கண்டிப்பாகத் தேவை!'' என்கிறார், 20 வருடங்கள் அனுபவமிக்க குடும்ப நல ஆலோசகர் சராஸ் பாஸ்கர்.

''நம் மீது ஏதாவது தவறு இருந்தால்தான் கவுன்சலிங் செல்ல வேண்டும் என்பது பலரின் எண்ணம். 'மேரேஜ் கவுன்சலிங்' என்பது, பெண்ணையும் மாப்பிள்ளையையும் திருமணத்துக்கு மனதளவில் தயார்படுத்தும் நன்முயற்சி. படிப்பு, வேலை, சம்பளம், அழகு, சொத்து என்று பொருத்தங்கள் பார்க்கும் பெரியவர்கள், பெண்ணையும் பையனையும் மண வாழ்க்கைக்கான சைக்காலஜிக்கல் ரெடினஸ் நிலைக்கு கொண்டுசெல்ல எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அதை கவுன்சலிங் செய்யும்!

எதிர்பார்ப்பு வேறு... நடைமுறை வேறு!

கவுன்சலிங்கில் மணமக்களுக்கு உணர்த்தப் படும் முக்கிய விஷயம், எதிர்பார்ப்பு வேறு... நடைமுறை வேறு என்பதுதான். படங்களில், புத்தகங்களில் இளம் வயதினர் பார்க்கும், படிக்கும் ஃபேன்டஸி வாழ்க்கை, நிதர்சனத்தில் சாத்தியமில்லை என்பதை அவர்களுக்குப் புரிய வைப்போம். அப்படி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் கனவுகளைப் பரஸ்பரம் பகிரசெய்து, அவற்றின் சாத்தியத்தன்மை குறித்தும் இருவரையும் வெளிப்படையாக பேசச் செய்வோம். திருமணத்துக்குப் பின் கூடும் பொறுப்புகளில், பேச்சிலர் வாழ்வின் இன்பங்கள் சில குறையலாம் என்பதை இருவருக்கும் புரியவைத்து, அதை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொடுப்போம்.

அரேஞ்சுடு மேரேஜ் நுட்பங்கள்!

சில வீடுகளில் காதலை மறுத்து புதிய வரன் பேசுவார்கள். இந்த ஏமாற்றத்தின் காரணமாக, அந்த ஆண் அல்லது பெண், தமக்கு ஜோடியாக வரப்போகிறவருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். எனவே, அவர்களுக்குத் திருமணத்துக்கு முன் கவுன்சலிங் மிக முக்கியம். வாழ்க்கையில் விரும்புவதெல்லாம் கிடைப்பதில்லை என்ற உண்மையையும், கிடைத்ததில் சந்தோஷம் கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இன்னொருவரின் வாழ்க்கையும், இன்னொரு குடும்பத்தின் சந்தோஷமும் சேர்ந்து பாழாகும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். தேவைப்பட்டால் இரு வீட்டினருக்கும் கவுன்சலிங் அளிக்கலாம். குடும்பத்தில் ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்துகொள்வது, மணமக்களுக்கும் உறவுகளை வலுப்படுவத்துவதில் பயனளிக்கும்.

முக்கிய வலியுறுத்தல்கள்!

மேரேஜ் கவுன்சலிங்கில் முக்கியமாக அன்பு மற்றும் நம்பிக்கையே உறவுக்கு அடிப்படை, பலம் என்பதை சொல்வோம். அதேபோல, தம்பதிகளிடையே பிரச்னை வருவது பணம், உறவினர்கள், தாம்பத்யம் என்ற மூன்று விஷயங்களைச் சுற்றித்தான். எனவே, அந்தப் பிரச்னை எழ வாய்ப்புள்ள சூழல் பற்றியும், அதை சமாளிப்பது குறித்தும் பேசிப் புரியவைப்போம். அதேபோல, பொருளாதார விஷயங்கள். சம்பளம், சேமிப்பு, குடும்பத்தில் உள்ள பொருளாதார கமிட்மென்ட்கள் பற்றி இருவரும் முன்னரே பகிர்ந்துகொண்டு, ஒப்பில்லாத விஷயங்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளச் சொல்வோம். வெளியிடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது போன்ற சமூக ரீதியான பழக்கங்களைப் பற்றி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவோம்.

எமோஷனல் சப்போர்ட் அவசியம்!

தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் எமோஷனல் சப்போர்ட் கொடுக்க வேண்டியது மிக முக்கியம். அந்தப் பிணைப்புதான் இணக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எந்தச் சூழலிலும் அதை தேயவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணி முடிந்து வந்த பிறகு வீட்டிலும் மொபைல், கம்ப்யூட்டர், டி.வி என்று 'ஆக்குபைடு' ஆக இருக்கக் கூடாது. அது துணைக்கான நேரம். அந்த நேரம் குறையக் குறைய, தாம்பத்ய உறவின் பலம் குறையும். தம்பதிகளுக்கான செக் ஸுவல் ஹெல்த் எஜுகேஷன் மிக முக்கியம்'' என்று விளக்கிச் சொன்ன சராஸ் பாஸ்கர்,

''முகூர்த்த உடை, அலங்காரம், போட்டோகிராஃபர், ஹனிமூனை எல்லாம் கொண்டாட்டமாகத் திட்டமிடுகிறோம். அதையெல்லாம்விட மிக முக்கியமான மேரேஜ் கவுன்சலிங்குக்கும் சந்தோஷமாக வாருங்கள்!'' என்று வரவேற்றார்.