Saturday, January 28, 2017

பாக்கெட் பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா?

பாக்கெட்பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா? என்பது போன்று அநேக ஆன்மிகக் கேள்விகள் நம் மனதில் தோன்றியவண்ணம் உள்ளது. காரணம்.நவீனமயமாக்கல் என்ற பெயரில் நம்முடைய பார்ம்பர்ய வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. கூட்டுக்குடும்பமாக இருந்தவரையில் அனைத்திலும் தெளிவு பெற்றிருந்த நாம், இன்று பணியின் நிமித்தமாக புலம் பெயர்ந்து செல்வதாலும், தனிக்குடித்தன வாழ்க்கையாக மாறிவிட்ட காரணத்தாலும், அர்த்தமுள்ள நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் பலவற்றை நாம் மறந்தே போய்விட்டோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாஸ்திரங்கள் தொடர்பாகவும், ஆன்மிகம் தொடர்பாகவும் பல சந்தேகங்கள் நமக்கு ஏற்படுவதும் இயல்பே. அப்படியான நம்முடைய சந்தேகங்களை அகற்றி நமக்கு தெளிவை ஏற்படுத்த ஆன்மிகப் பெரியோர்களும் துறை சார்ந்த பண்டிதர்களும்  இருக்கிறார்கள். நம்முடைய சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

பாக்கெட் பாலால் அபிஷேகம்


பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்யலாமா என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இறைவனை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றிய விளக்கம் உங்கள் பார்வைக்கு...

* வலம்புரிச் சங்கு அபிஷேகம்:  நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
* சொர்ணா (தங்க) பிஷேகம்: வியாபாரம் வளரும்; எதிர்பார்த்த லாபம் பெருகும்.
*  பன்னீர் கலந்த சந்தனக் குழம்பு:  இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகும்.
*  விபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.
*  சந்தனத் தைலம்: சுகத்தையும், இல்லத்தில் சுபிட்சத்தையும் தரும்.
*  திருமஞ்சனப் பொடி:  கடன் மற்றும் நோய் தீரும்.
*  கரும்புச் சாறு: நோய்களைத் தீர்க்கும்.
*  எலுமிச்சைப்பழச்சாறு: பகையை அழிக்கும்.
*  இளநீர்: இன்பமான வாழ்வு தரும்.
*  பஞ்சாமிர்தம்: உடல்-உள்ளம் இரண்டும் வலிமை பெறும்.
*  தேன்: குரலுக்கு இனிமையைக் கொடுக்கும்.
*  நெய்: முக்தியைத் தரும்.
*  தயிர்: நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
*  பால்: பிணிகள் நீக்கும்; நீண்ட ஆயுள் கொடுக்கும்.
அவரவர் விரும்பும் பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களை பிரதான பொருளாகக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லவேண்டும். 

பாலாபிஷேகம்


சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதென்றால், தூய்மையான பசும்பாலில்தான் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.  அபிஷேகத்துக்கு உரிய பால் என்றால், பசு கன்றை ஈன்று 16 நாட்கள் ஆகி இருக்க வேண்டும். அதன் பிறகு கறக்கப்படும் பாலில் இருந்துதான் அபிஷேகம் செய்யவேண்டும்.  அபிஷேகத்துக்கு பால் கறப்பதற்கு முன்பாக அந்தப் பசுவும் பால் கறப்பவரும் குளித்து நீராடி தூய்மையாக இருக்க வேண்டும் என்பது விதி. இப்படிக் கிடைக்கும் பாலைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள நமது வாழ்க்கைச் சூழலில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்கிறோம். தவறில்லை. ஆனால்,  இதற்கு மத்திம பலன்தான் கிடைக்கும்.  
முன்னதாக நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றைப் பார்ப்போம். முடிந்த அளவு, நமது தெருவிலோ அடுத்தத் தெருவிலோ கறந்த பாலை விற்பனைசெய்பவர்களிடம் சொல்லிவைத்து, நாம் பூஜை செய்யச் செல்லும் நாளில் மட்டுமாவது அதை வாங்கிச்செல்லாம். அப்படியும் கிடைக்காவிட்டால், பாக்கெட் பாலை வாங்கி பூஜைக்கு உரிய செப்புப் பாத்திரத்திலோ, புதிய  எவர்சில்வர் பாத்திரத்திலோ எடுத்துச்செல்வது நல்லது.  அப்படிச் செய்யும்போது, அந்தப் பாத்திரத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. இதை விடுத்து சிலர் பால் பவுடர் கலந்து  பாலை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அப்படிப்பட்ட பாலை வாங்கி பயன்படுத்துவது அதம பலனைத்தான் தரும்"